<$BlogRSDURL$>

Thursday, December 16, 2004

நாத்திகம் பயில்
--------------

தன் இளமையிலாவது ஒருவன் நாத்திகனாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.

1. நாத்திகம் மனிதனை விடுவிக்கிறது. மூதையர் சிந்தனைக் கட்டுகள்தான் ஒவ்வொருமனிதனுக்கும் மிகப் பெரும் தளை. தந்தையை எதிர்ப்பது சிறுவன் மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. தந்தையை விட மதமும், கடவுள் எனும் கருத்துருவமும் அப்பாதையின் மிகப் பெரும் தடைகள். நாத்திகமே அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.

2. நாத்திகம் மனிதனை தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள்குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தைவழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது.

3. நாத்திகம் மனிதனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவனை தன் செயல்களுக்குதன்னையே பொறுப்பேற்க கற்றுத்தருகிறது. எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கிகளையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்கவேண்டும். இரக்கம் கொண்டு கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.

4. நாத்திகம் மனிதனை இரக்கமுள்ளவனாக, அன்புடையவனாக மாற்றுகிறது. பிற மனிதரை, பிற உயிர்களை தன்னைப் போலவே எண்ண வைக்கிறது. வாழ்வில் கிடைக்கும்ஒவ்வொரு கணத்தையும் இழக்காமல் அனைவரையும் நேசிக்க கற்றுத்தருகிறது. மனிதவாழ்வின் நிலையில்லாமையும் இலக்கில்லாமையும், அவனை ஏங்கோ என்றோ அடையும்சொர்க்கம் போன்ற புனைகதைகளில் இளைப்பார விடாமல் இக்கணத்தை, இச்சூழலை,இங்குள்ள உயிர்களை செல்வமாக போற்றும் மனதைத் தருகிறது.

5. நாத்திகம் மனிதனை மனிதனாக்குகிறது. மதங்கள் மனிதனை மிருகம் என்கின்றன.பாவி என்கின்றன. அவனை தேவனாக்க முயல்கின்றன. மனிதனின் இருத்தல் நிலையை கீழானதாகக் காட்டி வசைபாடி அவனை குற்றவுணர்சியும் பய உணர்சியும்கொண்டவனாக்கி மனச் சமனை நிலைகுலைக்கின்றன.

6. நாத்திகம் மனிதனை அறநெறியாளனாக ஆக்குகின்றது. விடுபட்ட மனமுடைய,தூய்மையான சிந்தனைகள் கொண்ட, பொறுப்புள்ள, அன்பு நிறைந்த ஒரு மனிதன்,சுய அறம் இன்றி வாழ இயலாது. மனிதனுக்கு அந்த சாத்தியத்தை நாத்திகம்வழங்குகிறது. முழு நாத்திகனாக இருப்பது ஒரு அசாதாரணமான கடினமான ஒரு நிலை. ஒவ்வொருமனிதனுக்கும் இந்தநிலை வாழ்வின் இளமையிலாவது வாய்க்க எல்லாம் வல்ல இறைவன் வாய்ப்பளிக்கட்டும். (:-)

Thursday, December 09, 2004





வீட்டில் சேகர்.

பள்ளி/கல்லூரி பதிவேடுகளில் ந.ப.சுந்தரராஜன்.

அமெரிக்காவில் சுந்தரராஜன் பசுபதி.

மடலாடற்குழுக்களில் பசுபதிராயன்.

வலைப்பூ உலகத்தில் மூக்கு சுந்தர்.

என் பேர் சொல்வதுதான் மேற்சொன்னதுபோல சரித்திரம் மாதிரி இருக்குமே ஒழிய, என் வாழ்க்கை இன்னமும் சரித்திரம் ஆகுமளவுக்கு ஏதும் செய்து விடல்லை. ஆனால், அந்தப் பேராசை இருக்கிறது உள்ளுக்குள்.

பிறந்தது மயிலாடுதுறை எனப்படும் மாயூரம். இப்போது நாகை காயிதே மில்லத் மாவட்டத்தின் ஒரு தாலுகா என்றாலும், தஞ்சை மாவட்டத்துக்காரன் என்று அறியப்படுவதிலேயே விருப்பம் அதிகம். தந்தை ஒய்வுபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.இப்போதும் மாயவரம் தருமபுரம் ஆதினத்தில் இறைபணி செய்கிறார். தாய் வீட்டரசி. மூன்று மூத்த சகோதரிகளின் கடைக்குட்டி தம்பி நான். பள்ளிப்படிப்பு மாயவரம் DBTR National High School. கல்லூரிப் படிப்பு காரைக்குடி அழகப்பச்சேட்டியார் பொறியியல் கல்லூரியில் - மின்னியல் மற்றும் மின்ணணுவியல் - இளங்கலை. (1988-1992)

அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை. HCL, Zenith, Nexus, Hexaware போன்ற இந்திய நிறுவனங்களில் வன்கலன் / வலைவேலை / இயங்குதளம் ( hardware/Networking/operating systems) என்று பலபட்டறையாக குப்பை கொட்டி விட்டு, பின்னர் சிங்கப்பூர். இப்போது அமெரிக்காவில் அரசு வேலையில் சாக்ரமண்டோவில் கடந்த நான்கு ஆண்டுகளாக வாசம். ஒரே(?!!) மனைவி மற்றும் ஒரு பிள்ளை. என்னைப் பற்றி இங்கே ஓரளவு சரியாகச் சொல்லி இருக்கிறார்கள். :-)

ஐந்தாம் வகுப்பிலிருந்தே தமிழ்ப்பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், நாடகம், பாட்டு என்று மேடையேறினாலும், கல்லூரிப் பருவத்தில் 1991 விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றதே முக்கியமான



திருப்புமுனை - என் வரையில்.



இணையம் அறிமுகமாகியது என்.சொக்கன் நடத்துகின்ற தினம் ஒரு கவிதை யாஹூ குழுமம் மூலம். அவர் அழைத்துக் கொண்டுபோய் விட்ட இடம் ராயர் காப்பி க்ளப் குழுமம். பிறகு மரத்தடியும் பழக்கமானது. இப்போது பெருமளவு என் வலைப்பூவில் எழுதுகிறேன்.



தனி வளை மற்றவர் படைப்புகளை சேமித்து வைக்க.



என்னையொத்த சாப்பாட்டு ரசிகர்களுக்காக இரவல் சமையலில் இணையத்தில் வரும் பிற(ர்) சமையல் குறிப்புகளை சேமித்து வைக்கிறேன்.



ஏகப்பட்ட நண்பர்களையும், கொஞ்சம் எதிரிகளையும், நிறைய்ய்...ய ஆத்ம திருப்தியையும் வலைப்பூ எனக்கு தந்திருக்கிறது

என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுமாயின்
sundar23@yahoo.com முகவரிக்கு ஒரு மடலிடுங்கள்.

நீங்கள் இங்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.




This page is powered by Blogger. Isn't yours?