<$BlogRSDURL$>

Friday, February 24, 2006

Thanks Vikatan 

‘‘விடைபெறக் காத்திருக்கிறேன்!’’

‘‘எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும், இளம்பெண்களும், முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ, இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால், ஒரு முக்கிய வேலை இருக் கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன்’’ என்கிறார் புஷ்பராஜா. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தைத் துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவர். இப்போது அரசியல் தஞ்சமடைந்து பிரான்ஸில் வசிக்கிறார்.

‘‘யாழ்ப்பாணம் மயிலிட்டிதான் என் சொந்த ஊர். எழுபதுகளின் துவக்கத் தில் சிங்களப் பேரினவாதத்தின் அடக்கு முறைகளை எதிர்கொள்ள, ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை நோக்கித் திரும்பிய காலம். சிங்கள ஆதிக்கத்தை எதிர்க்க அஹிம்சை உதவாது, ஆயுதம் தான் உதவும் என்று முடிவெடுத்து, அதுவரை நான் இருந்த தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகி, தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன், சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.

ஈழ விடுதலையில் ஆயுதப் போராட் டத்தை முதன்முதலாகத் துவக்கி வைத்தது மாணவர் பேரவைதான். பின்னர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினராகவும் போராளியாகவும் இருந்தேன். அதே காலகட்டத்தில் ஈரோஸ், டெலோ, இ.என்.டி.எல்.எஃப், தமிழ் புதிய புலிகள் என ஏழெட்டு அமைப்புகள் ஈழத்தில் முளைத்தன.

காக்கைகளுக்கு முன்பே நாங்கள் விழித்தெழுவோம். எமது மக்களின் உண்மையான விடுதலைக்கு எதிரியாக இருந்த சிங்களவர்களைத் தேடி அலை வோம். போர்ப் பயிற்சிக்காக பல்வேறு குழுக்களும் பாலஸ்தீனத்துக்கும், இந்தியாவுக்கும் போயின. எல்லோருக் கும் ஆயுதம் கிடைத்தது. தமிழகத்திலும், வட இந்தியாவிலும் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. வேதாரண் யத்தில் எங்களைக் கொண்டுவிடவும், அழைத்துப்போகவும் படகுப் போக்கு வரத்து குறிப்பிட்ட நாட்களில் இருந்தது. எல்லோரும் ஈழ விடுதலைக்காகப் போராடினோம். எனினும், நாங்களும், மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது.
எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. வேறு வேறு குழுக்கள் வேறு வேறு தத்துவங்களைக் கொண்டு இருந்தன. ஆனால், அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்... அது, தமிழ் ஈழம் அடைவது!


எண்பதுகளில் தொடங்கி இன்று வரை ஈழத்தில் சகோதர யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 6,000 பேர். சுடப்பட்டும், மின்சாரக் கம்பங்களில் தொங்கவிடப் பட்டும் கொலை செய்யப்பட்ட இந்தப் போராளிகளெல்லாம் யார்? சிங்களர்களா? இலங்கை ராணுவத்தினரா? இல்லை, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகத் தங்களின் வீட்டை, சொந்தங் களைத் துறந்து, ஆயுதம் தரித்தவர்கள்!

ஈழத்துக் கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று...

துரோகி எனத் தீர்த்து
முன்னொரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றஞ் சாட்டியவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனைச்
சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச்
சுட்டது
சும்மா இருந்தவனையுஞ்
சுட்டது.....

இப்படி ஒரு சூழலில்தான் நானும் கொலை செய்யப்படுவேன் என்று பயந்தேன். ஒன்று, என் எதிரிகளால். இன்னொன்று, ஆயுதம் தரித்த என் நண்பர்களால். ‘இது கொலைகாரங்க பூமி ஆயிடுச்சு. நாம இனிமே இங்கே இருக்க வேண்டாம். வேற எங்காவது போயிடலாம்’ என்று என் காதலி சொன்னாங்க. அதற்கு அடுத்த நாள், அதாவது 82&ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டோம். என் உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர். அழகான கூடு மாதிரி இருந்தது வீடு. அந்தக் கூட்டை நானேதான் கலைத்துவிட்டு என் மனைவியோடு பிரான்ஸ§க்கு வந்தேன். இதோ 24 ஆண்டுகளாகிவிட்டன.

உலகத்தின் எந்த மூலையில் சுற்றி அலைந் தாலும், தாயகக் கனவு என்னை அலைக் கழித்துக்கொண்டேதான் இருந்தது. தேவைக்கு அதிகமாகக் காசிருந்தால் குடிப்பேன். போதை, நிறைய விஷயங்களை மனந்திறந்து பேசவும், கூடிக் கதைக்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. கிடைக்கிற வேலையெல்லாம் செய்தோம். ஈழத்தின் சாதீய சமூகம் எந்தெந்தத் தொழிலை எல்லாம் செய்யக் கூடாத தொழிலாக விலக்கி வைத்ததோ, அதையெல்லாம் செய்தோம்.

தாய் மண்ணைத் தொலைத்து, புதிய சூழலில், புதிய உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டோம். என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை இப்படித்தான் அந்நிய மண்ணில் கழிக்க நேர்ந்தது’’ என்று உலர்ந்த உதட்டை ஈரப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசுகிறார் புஷ்பராஜா.

‘‘கடந்த ஜனவரி மாதம், பொங்கல் அன்று எனக்குக் கடுமையான வயிற்று வலி. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு நாள் கழித்து, மீண்டும் மிகக் கடுமை யான வலி வயிற்றைப் பிடுங்கி எடுக்க, பிரான்ஸில் உள்ள மருத்துவமனைக்குப் போனேன். டாக்டர் என்னைச் சோதித்துவிட்டு, ‘உங்களுக்கு வேண்டியவர்கள் எங்கிருக்கிறார்கள்?’ என்று கேட்டார். எனக்கு என் நிலைமை புரிந்துவிட்டது. பின்பு, ‘உங்கள் கல்லீரல் புற்றுநோயால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்றார். என் மனைவியும், குழந்தை களும் கதறி அழுதார்கள். என் முப்பத்தைந்து வயதில், என் அம்மாவும் அப்பாவும் இறந்தபோதுகூட நான் என் தாய் நாட்டுக்குப் போனது கிடையாது. போக வேண்டும் என்ற எண்ணம்கூட வந்தது கிடையாது. மயிலிட்டி இப்போது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் எண்ணம் முழுக்க வேறொன்றில் இருந்தது.

ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்று நூலை எழுதும் முயற்சி அது. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்கிற நூலை எழுதியிருக் கிறேன். அடுத்ததாக இன்னும் இரண்டு நூல்களை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஒன்று, ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. இன்னொன்று, சிங்கள ஆட்சியாளர்கள் காலங்காலமாகத் தமிழர்களின் உரிமை களை எப்படியெல்லாம் காலில் போட்டு மிதித்தார்கள்... தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் எப்படி சிங்கள ஆட்சிக்குத் துணை போனார்கள் என்பதை எழுத ஆசைப்பட்டேன். அதற்குக் குறைந்த பட்சம் இன்னும் எட்டு மாதங்களாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்.

இங்கே, சென்னையில் ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் போல் கேன்சர் நோயாளிகள் நிறைய பேரைப் பார்த்தேன். சின்ன குழந்தைகள், இளம்பெண்கள் என ஏராளமானோர் வெளியில் தங்களுக்கான தீர்ப்பைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்தார்கள். அங்கிருந்த சிலரிடம் பேசியபோது, நான் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.
நான் மருத்துவரீதியாக இப்போது சில முயற்சிகளை எடுத்திருக்கிறேன். அது வெற்றி பெறுமா, தோல்வியுறுமா... தெரியவில்லை. நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. என் வீட்டார் கடவுளை நம்புகிறார்கள். இதுதான் உலகம், இப்படித்தான் வாழ்க்கை என்று விவரம் தெரியத் துவங்கிய காலத்தி லிருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பெரியாரிஸ்ட்!

தேதியை நிச்சயித்தபடி வரும் மரணத்தில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு, துரிதமாக முடிக்கலாம். எழுத விரும்புவதை எழுதலாம். சந்திக்க விரும்பும் நண்பர்களைச் சந்தித்து அளவளாவி மகிழலாம். ஆனால், என்ன ஒன்று... இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கப் போகிறோம் என்பதால், ஆசை கட்டுக்கடங்காமல் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை ஆசைகளும் இவ்வளவு நாள் எங்கே இருந்தன என்று தெரியவில்லை. இறுதித் தேர்வை எழுதும் மாணவன் போல் என்னை உணர்கிறேன்.

எழுதலாம் என்று அமர்ந்தால், சோர்வாக இருக்கிறது. ஆனாலும், நான் விடாப்பிடியாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கை ஊக்கம் தருகிறதென்றால், மருந்துகள் வாட்டி வதைக்கின்றன. நோயாளியாக இருக்கிறோம் என்கிற உணர்வே ஒரு படபடப்பை ஏற்படுத்துகிறது. எனக்கு ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி நடந்திருக்கிறது. இப்போது மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதற்கு என் உடம்பு ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை.

ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, ஆக்ரமிக்க முயலும். எப்போதும் அந்நிய சக்திகளைவிட, ஈழப் பிரச்னையில் இந்தியா நேர்மையுடனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தலையிடுவதைத்தான் போராளிகள் விரும்புவார்கள். என் விருப்பமும் அதுதான்!’’ என்கிறார் புஷ்பராஜா.

கடைசியாக, புஷ்பராஜாவுக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முயற்சியையும் அவர் உடம்பு தாங்காது என்பதால் மருத்துவர்கள் கைவிட்டு, அவரது கடைசி நாட்களை சொந்த மண்ணிலேயே சென்று கழிக்கும்படி சொல்லிவிட்டார்கள்.

‘‘எனக்கேது சொந்த மண்? நான் எங்கே செல்ல முடியும்? நாளை அமையவிருக்கும் தமிழ் ஈழத்தைக் காண நான் உயிரோடிருக்க மாட்டேன். நான் பிறந்த மண்ணே... நான் வாழ முடியாத மண்ணே... ஒரே ஒரு கேள்வி உன்னிடம்... வெடி மருந்து வீச்சமில்லாத உன் தெருக்களில் எம் பிள்ளைகள் நடக்கின்ற நாள் என்று வரும் எம் மண்ணே?’’

Friday, February 17, 2006

நன்றி : சுந்தரவடிவேல் 

நேத்து ஒரு வரலாற்றாசிரியர் பேச்சுக்குப் போனேன். தலித் நடுத்தர வர்க்கம் அப்படின்னு சொல்றாங்களே இது நடந்திருக்கா, இந்த நடுத்தட்டுக்கு என்னென்ன பிரச்சனைகள் அப்படிங்கறதப் பத்திப் பேசினார். அவர் பேரு ஞானேந்திர பாண்டே, சுருக்கமா ஞான் பாண்டே, ஞாவன்னா வராத வாய்க்கு க்யான் பாண்டே (Gyan Pandey). எமொரி பல்கலைக்கழகத்துல பேராசிரியர். இப்பதான் ஜான் ஹாப்கின்ஸ்லேருந்து எமொரிக்குப் போயிருக்கார். இவர் இந்தியப் பிரிவினையைப் பத்தியும், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவைப் பத்தியும் ஆராய்ச்சி செஞ்சு புத்தகமெல்லாம் எழுதியிருக்காராம். அமெரிக்காவுல இருக்க கறுப்பர்களையும் இந்திய தலித்துகளையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்றார். ரெண்டு பேருக்கும் இருக்க நெருக்கடி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுங்கறார். தலித் பத்தின ஆராய்ச்சியை வட இந்தியாவுல மட்டுந்தான் செஞ்சிருக்கார். அவர் நேத்து பேசினதச் சுருக்கிக் கீழ தர்றேன்.

நடுக்குடி

நடுக்குடி, நடுத்தட்டு, நடுத்தர வர்க்கம்னா யாரு? பொதுவாச் சொன்னா, பரம்பரைச் சொத்து இல்லாதவங்க. கீழ கெடந்து மேல வந்தவங்க. உழைக்கணும், சாதிக்கணும்னு துடிக்கிறவங்க. தன்னையும், உலகத்தையும் பத்தின உணர்நிலையோட இருக்கவங்க. பணத்தாலயும், படிப்பாலயும் மட்டும் நிர்ணயிக்கப் படாதவொரு கூட்டம். இவங்களுக்கு உதாரணமாச் சொல்லனும்னா பதினெட்டு பத்தொம்பது நூற்றாண்டு இங்கிலாந்துல இருந்த பிரமிட் அமைப்புச் சமுதாயத்துல நடுவுல இருந்தவங்க. இவங்க குடிகள் அவ்வளவே. இவர்கள் ஆள்வோர்களில்லை. அமெரிக்கக் கறுப்பர்களானாலும் சரி, இந்திய தலித்துகளானாலும் சரி, அவர்களுக்குள்ள ஒரு நடுத்தர வர்க்கம் தொடங்கினது ரொம்ப அண்மையிலதான். இதுக்குக் காரணம் தெரியும். அடிமைத்தனம். இப்போது முளைத்திருக்கும் தலித் நடுக்குடிக்குத் தான் நடுக்குடியா அல்லது தலித்தா என்றொரு உளைச்சல் இருந்து கொண்டேயிருக்கும். நீ எங்கிருந்து வந்தன்னு நினைச்சுப் பாருன்னு உடன்பிறந்த கூட்டம் கேட்கும். கீழே இருக்க தலித் கூட்டம் எங்களுக்கு என்ன செய்றன்னு கேக்கும். அதே நேரத்துல மத்த நடுக்குடிகளோடயும் ஆடணும். அப்போ நா யாரு தலித்தா, நடுக்குடியா? ஒரு பிராமண நடுக்குடி அப்படிங்கறது ரொம்பப் பழகிப் போன ஒண்ணு. நடுக்குடியில பிராமணர்களுக்கோ அல்லது வேறு “உயர்” சாதி நடுக்குடிக்கோ இல்லாத பிரச்சினைகள் தலித்துகளுக்கு இருக்கு. இவர்களது நடத்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப் படும். பொதுத் தளத்தில் இவர்கள் யாரென்பது அடிக்கடி நினைவூட்டப் படும். நடுத்தட்டுக்கு வந்த பின்னும் தொடர்ந்து தாக்கும் இந்த தலித் என்ற குறியீடு மறைவது ரொம்பக் கடினம்.
இதுக்கு மூனு உதாரணங்களைச் சொல்லலாம். இதெல்லாம் உதாரணந்தான். இதைப் போல புள்ளி விபரம் நிறைய சேக்கலாம். ஆனா ஒரு நெலமயப் புரிஞ்சுக்க இந்த உதாரணங்களே போதும்னு நெனக்கிறேன்.

1. பல்வான்சிங், ஐ.ஏ. எஸ்

1959ல ஐ.ஏ.எஸ்ல தேறி வேலையில சேர்ந்தார். அந்தக் கால கட்டத்துல எல்லாரையும் போல சமுதாயத்தை மாத்தனும்கற மனநிலையில இருந்தவர். 1964ல பதவி விலகினார். நடந்தது என்ன? யாரோ ஒரு தலித். முடி வெட்டிக்கப் போயிருக்காரு. கடைக்காரர் வெட்ட முடியாதுன்னார். இல்ல வெட்டணும்னு தலித் கேட்க. அப்பன்னா இத்தன ரூவா குடுன்னு கூலிய உயர்த்திக் கேட்க. சரின்னு தலித் ஒத்துக்கிட்டாலும், கடைக்கு வெளியில ஒக்கார வச்சு முடி வெட்டிவிட்ட கேஸ் ஒன்னு. இத விசாரிச்சாரு பல்வான் சிங். இந்த வன்முறையைக் கண்டிச்சு எழுதியிருக்கார். வந்தது அரசச் செயலர் ஓலை. விசாரணை. அதுவரைக்கும் நல்லா வேலை செய்றன்னு சொன்ன உயரதிகாரியெல்லாம் உன் வேலை மோசம், இது தப்பு, அது தப்பு, சாதாரண விஷயத்தையெல்லாம் பெருசாக்குற, நீ ரொம்ப உணர்ச்சி வசப் படுற, ஒத்துப் போமாட்டங்கிற அப்படின்னெல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறாங்க. வேலை மாத்தல் வருது. கேள்வி கேக்குறார். கடைசியில ஒன்னும் முடியாம பதவி விலகுறார். அப்புறமா ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - Balwan Singh’s autobiography: an untouchable in the IAS.

2. டாக்டர் அம்பேத்கார்

நல்ல படிப்பாளி. முன்னேறனும்னு ஆர்வத்துல உந்தப் பட்டவர். சுதந்திரத்துக்கப்புறம் காங்கிரஸ் கட்டின முதல் நடுவணரசுல சட்ட அமைச்சரா இருந்தார். 1951ல ஒரு பிரச்சினையில பதவி விலகினார். சுதந்திர இந்தியாவோட சட்டங்களை எழுதினதுல இவருக்கு முக்கிய பங்கு இருக்கு. இவரை இந்து முறைச் சட்டம் (Hindu Code Bill) விவகாரத்துல பதவி விலக வச்சது சாதீயம். இவர் இந்து மதத்துல இருக்க சாதீயம், சாதிய வச்சு மக்களை நசுக்குற உத்தி, பெண்ணடிமைத்தனம், எல்லாத்தையும் சட்ட பூர்வமா விலக்கப் பாத்திருக்கார். இதுக்காக, எல்லா மக்களுக்குமாக சமத்துவமாகச் சட்டங்களை ஆக்க இந்து முறைச் சட்டத்தை முன் வைத்தார் (இது இன்றளவும் நடைமுறைப் படுத்தப் படாதவொன்று). பாராளுமன்றத்துல கார சாரமான விவாதம் நடக்குது. இவர் இந்து மதத்துல இருக்க சாதிப் பிரிவினையை விமர்சிக்கிறார். உடனே கோவிந்த் மால்வியா முதற்கொண்டு எல்லா இந்துத்துவவாதிகளும் இவரைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இறுதியில் தான் உயர்குடிக்காரனென்று வெளிப்படையாகவும், அம்பேத்கார் ‘சண்டாள்’ என்று மறைமுகமாகவும் விளிக்கப் படுகிறது. இது பாராளுமன்றத்தில். ஒரு சட்ட மேதைக்கு எதிராக.

3. ஒரு பத்திரிகையாளர்

இந்தக் காலத்து ஆளு. பேரு சொல்லலை. ராஷ்ட்ர சஹாரா அப்படிங்கற இந்திப் பத்திரிகையில பத்தி எழுத்தர். தலித் பிரச்சினைகளைப் பத்தி எழுதுறார். வருது கட்டுக் கட்டா வாசகர் கடிதம். பல நூறு கடிதங்கள் நன்றி சொல்லி, வழி காட்டச் சொல்லி, இப்படியும் இருக்கான்னு ஆச்சரியப்பட்டு, நிறைய சக தலித்துகள்கிட்டேருந்து. இன்னொரு பக்கம் திட்டித் திட்டி உயர்சாதிக் காரங்ககிட்டேருந்து. கொலை மிரட்டலும். உன் சாதிப் பெண்டுகள் 70 பேரை நாங்க தினமும் வன்புணர்றோம், இன்னும் உனக்குப் புத்தி வரலயாடா தேவடியாப் பயலே? உட்பட ஆபாச வார்த்தைகளின் அத்தனை படிநிலைகளிலும் கடிதங்களைப் பார்க்கலாம். இதையெல்லாம் தாண்டி வருகிறது மிகவும் நாசூக்கான, சமத்துவபுர ஜெண்டில்மேன் டைப்புல ஒரு கடிதம், அதுதான் வக்கிரத்தின் உச்சம். அன்புள்ள திரு…வணக்கம். நல்லா எழுதுறீங்க. தலித் நல்லாயிருக்கனுங்கறதுல எனக்கும் உடன்பாடே. ஆனா நீங்க சொல்லுங்க, நீங்க ஒரு தலித்தா, அல்லது இந்தியனா? இந்தியனா இருக்கேன்னு சொன்னீங்கன்னா, தயவு செஞ்சு இந்தியாவ உடைக்காதீங்கப்பா. இதுல இருக்க பிரச்சினையெல்லாம் போதும், மேலும் மேலும் பிரச்சனையைக் கிளப்பாதீங்க. என்று போகிறது கடிதம். இதுல அடிநாதம் என்னன்னா உனக்கு எம்புட்டு குடுத்திருக்கோம், வச்சுக்கிட்டு நன்றியோட இருக்கத் தெரியலயே, என்னத்துக்கு சும்மா கம்ப்ளெயிண்ட் பண்ற, என்ற மனோநிலை. பீடத்திலிருந்துகொண்டு எழுதுகிற பண்டிட்டுகளின் குரல் அது.

அவ்வளவுதான் பேச்சு. எங்கு போனாலும் விடாத சாதிப் பாகுபாடு. பல முறை இந்த வலைப்பதிவுல அடிச்சுக்கிட்டு செத்த விஷயம்தான். ஆனாலும் பேசப் பட வேண்டியது. எது இதைக் கட்டிக் காக்குது? இந்து சமூக அமைப்பு. இதுக்குள்ளேருந்து ஒரு தாழ்த்தப் பட்டவன் தலை நிமிர்வது கடினம். எந்தத் துறையிலும் தலித் எதிர் கொள்ளும் பிரச்சினை. தலித் ஐ.ஏ.எஸ்ஸ¤க்கு வேலையில் நிகழும் சிறுமைப்பாடுகள். பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்தாலும் தலித் என்பதாலேயே கோட்டா என்ற கிண்டல். தலித் கட்சித் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள். (திருமா தெளிவாகச் சமீபத்திய உரையில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். திராவிடக் கட்சிகள் அரவணைக்கலைன்னா அதைக் கிண்டல் செய்பவர்களுக்கு தலித் மேலயா அக்கறை? இல்ல. கீழ்க்குடிகள் ரெண்டு பட்டதால வந்த ரகசிய சந்தோஷம்.) ஆக தலித் என்பவர் மற்ற நடுக்குடிகளைப் போலல்லாமல் தொடர்ந்து இரட்டை உணர்நிலையில் ஊசலாட்டப் பட்டிருக்கிறார், தொழில் முறையிலும் சமூகத்திலும் சவால்களை எதிர் கொள்கிறார். இன்றைய தேதியில் தலித்துகளை நேரடியாகத் தாக்குபவர்களாகட்டும், மறைமுகமாகக் கிண்டல் செய்பவர்களாகட்டும், அல்லது உன் கதையை நானெழுதுகிறேனென்று கிளம்பியிருக்கும் பார்ப்பன தலித்-எளக்கியவியாதிகளாகட்டும், யாராயிருந்தாலும் அவர்களது நோக்கங்களைக் கூர்ந்து கவனித்தால் அது சாதி என்கின்ற இந்து மனக் கட்டமைப்பிலேயே அடிப்பிடித்திருப்பதைக் காணலாம். சில நேரங்களில் அது கொஞ்சம் வளர்ந்து பரிணமித்தது போலப் பல்லிளிக்கும்; இந்திய தேசிய ஒருமைப்பாட்டு முகமூடியைப் போட்டுக் கொண்டிருக்கும்; கூர்ந்து கவனித்தால் அது அதே சாதீய இந்து மன அடிப்பிடிதான்.

நன்றி : சுந்தரவடிவேல்

Excellence 

I was raised to believe that excellence is the best deterrent to racism or sexism. And that's how I operate my life."—Oprah Winfrey

This page is powered by Blogger. Isn't yours?